தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் திரையரங்கம் இடிக்கப்படுவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாக்கள் தற்போது மிகவும் வளர்ந்து வரும் நிலையில், புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு சினிமாவும், திரையரங்குகளும் நகர்ந்து விட்டன.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சில திரையரங்குகள் ஈடுகொடுக்க முடியாமல் திரையரங்குகளை இடித்து விட்டு வணிகவளாகமாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், துணி கூடாரத்தை விட நிரந்தரமாக ஒரு கட்டடம் கட்டி திரைப்படங்களைக் காட்ட வேண்டும் என்று எண்ணிய சாமிகண்ணு வின்சென்ட் கடந்த 1914-ல் முதல் நிரந்தர திரையரங்கம் ஒன்றை கோவையில் உருவாக்கினார். அந்த தியேட்டர் தான் வெரைட்டிஹால் திரையரங்கம். இது தற்போது டிலைட் திரையரங்கம் என அழைக்கப்படுகிறது.
இந்த டிலைட் திரையரங்கம் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கம் என அழைக்கப்படுகிறது. நூற்றாண்டை கடந்த திரையரங்கத்தில் தொடர்ந்து திரைப்படங்களும் திரையிடப்பட்டு வந்தன.
இந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததாலும், சரிவர பராமரிக்க முடியாததாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மற்றும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் திரையரங்கத்தை இடிக்க உரிமையாளர்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை!
திரையரங்கம் இடிக்கப்பட்டு இப்பகுதியில் வணிக வளாகம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், வணிக வளாகம் அமைத்தாலும் கூட கட்டாயம் ஒரு மினி திரையரங்கமாவது அதில் இருக்கும் என்ற நம்பிக்கையில் திரையரங்கில் பணியாற்றிய ஊழியர்கள் உள்ளனர்.