கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடையே துரை வைகோ பேசும்போது, திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றோம். 2024-ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது , மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்றார்.
அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும், அதிமுக பாஜகவை எதிர்ப்பதை வரவேற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
மதவாதசக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக மதிமுக கூட்டணி உருவாகியது என கூறிய அவர் , சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது எனத் தெரிவித்தார்
யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கின்றார்களோ அவர்களை அமலாக்கத்துறை , சிபிஐ போன்ற மத்திய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது எனவும் தெரிவித்தார்.
2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என தெரிவித்த அவர், கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினர்களைப் பெற்றிருந்தோம், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம், கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் எனத் தெரிவித்தார்.