அசாமிற்கு சென்ற ரூ.25,000 கோடி முதலீடு! தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு அசாம் மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தொழில் துறையில் தொட்டதற்கெல்லாம் கொள்கைகளை வெளியிடும் கொள்கை இலக்கற்ற திமுக அரசில், பெரிய நிறுவனங்களின் புதிய முதலீடுகள் ஏதும் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை காணவில்லை.
அம்மாவும் -அம்மாவின் அரசாலும் துவக்கப்பட்ட தொழிற்சாலைகளே தங்களது புதிய கிளைகளை தமிழ்நாட்டில் பரப்புகின்றன, திமுக ஆட்சியில் புதிதாய் ஏதும் வந்ததாய் தெரியவில்லை.
செமி கண்டக்டர்[ Semi Conductor] எனப்படும் குறை கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்க தனி கொள்கை வகுத்தாலும் நிர்வாகத் திறனற்ற அரசின் குறைபாட்டால் , டாடா நிறுவனம் தமிழகத்தை விட்டு அசாம் மாநிலம் சென்றுள்ளது.
அத்துடன் கூடவே ரூ.25ஆயிரம் கோடி முதலீடும் சென்று விட்டது. ஊதியம், வேலைவாய்ப்பு என இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றாமல் இருள் சூழ வைக்கும் திமுக அரசுக்கு எனது கண்டனங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.