தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு பேசுகையில்,
"சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ. 63,246 கோடி செலவில் 119 கி.மீ தூரத்திற்கு 3 வழித்தடங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான உயர் வழித்தடம் வரும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ. 4,625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பிற்காக ஒப்புதல் கோரப்படவுள்ளது.
மேலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலுமான இரண்டாம் கட்டத்தின் நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.