கோவை: 'இந்த மாதிரி பொய் சொல்ற முதலமைச்சரை பார்த்ததில்லை' என்று வாய்தவறி ஆ.ராசா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்.பி ஆ.ராசா அங்கிருந்தவர்களிடையே பேசும்போது இந்த மாதிரி பொய் சொல்லும் முதலமைச்சரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னர் பொய் சொல்லும் பிரதமரை பார்த்ததில்லை என மாற்றிக் கூறி சமாளித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திமுக எம்பி ஆ.ராசா சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சேரன் நகர் பகுதியில் ஒரு கோடியே 70லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசிய ஆ.ராசா, தமிழகத்திற்கு 37 ஆயிரம் நிவாரணம் நிதி கேட்டும் ஒரு பைசா கூட தராத மத்திய அரசும் பிரதமர் மோடியும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
இதுபோல பொய் சொல்லும் முதலமைச்சரை நான் பார்த்ததில்லை என ஆ.ராசா பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த கட்சி நிர்வாகிகள் சுதாரித்துக் கொண்டு ஆ.ராசாவிடம் கூறினர். உடனடியாக அவர் இப்படிபட்ட ஒரு பிரதமரை நான் 25 ஆண்டுகளில் பார்க்கவில்லை என்று மாற்றி கூறி சமாளித்தார்.