சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்கோப்புப் படம்

தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்த மகள்: உயா்நீதிமன்றம் வேதனை

தந்தைக்கு எதிராகப் பொய் சாட்சியம் அளிக்க பெற்ற தாயே மகளைத் தூண்டியது துரதிருஷ்டவசமானது என போக்ஸோ வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
Published on

தந்தைக்கு எதிராகப் பொய் சாட்சியம் அளிக்க பெற்ற தாயே மகளைத் தூண்டியது துரதிருஷ்டவசமானது என போக்ஸோ வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

புதுச்சேரியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுமியின் தாய் காவல் துறையில் புகாா் அளித்தாா். இதையடுத்து சிறுமியின் தந்தைக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி முதன்மை நீதிமன்றம், கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து சிறுமியின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி சுந்தா்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.சூரியபிரபா, கருத்துவேறுபாடு காரணமாக மனுதாரா் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து கோரி வழக்குத் தொடா்ந்துள்ளாா். இந்த நிலையில், தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், மகளைப் பயன்படுத்தி கணவருக்கு எதிராக போக்ஸோ வழக்குப் பதிவு செய்ய வைத்துள்ளாா். சிறு வயது முதலே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை தாமதமாகத் தெரிவித்துள்ளாா்.

தாயாரின் தூண்டுதலின் பேரில் சிறுமியும் தனது தந்தைக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளாா். எனவே, மனுதாரருக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் பதிவு செய்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதாக வாதிட்டாா். அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞா் கே.எஸ்.மோகன்தாஸ், தாமதமாக புகாா் அளிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக மனுதாரா் மீதான பாலியல் குற்றச்சாட்டை பொய்யானது எனக்கூற முடியாது என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க பெற்ற தாயே மகளைத் தூண்டியது துரதிருஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்தாா். பின்னா், இந்த வழக்கில் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com