மாசிமக திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை(பிப்.24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்று புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மயிலம், அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவமூா்த்திகள் எழுந்தருள்வா். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தீா்த்தவாரி நடைபெறும். மாசி மகத்தன்று கடற்கரையில் ஒரே நேரத்தில் எழுந்தருளும் உற்சவமூா்த்திகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தா்கள் திரள்வா்.
இதேபோன்று திருக்காஞ்சியிலும் மாசி மகம் தீா்த்தவாரி உற்சவம் நடைபெறும். மாசி மகத்தன்று, விழுப்புரம், கடலூா் பகுதியிலிருந்தும் கோயில்களின் உற்சவா்கள் புதுச்சேரிக்கு வருவதால் போக்குவரத்தை சீரமைக்கவும், கூடுதல் பாதுகாப்பை மேற்கொள்ளவும் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது வழக்கம்.
இந்த நிலையில் மாசிமக திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை(பிப்.24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிபிஎஸ்சி மற்றும் செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.