வருகிற பிப்.28ம் தேதிக்குள் திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஏற்கெனவே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இருகட்சிகளும் தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதேசமயம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், இந்த முறை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளித்த கமல், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வருகிற பிப்.28ம் தேதிக்குள் திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிப்.29ஆம் தேதி கமல்ஹாசன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டு மார்ச் 10ஆம் தேதிதான் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது. எனவேதான் திமுக-மநீம இடையே பிப்.28ஆம் தேதிக்குள் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.