ஜெர்மனியைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா பாடிய கிருஷ்ணர் மற்றும் அண்ணாமலையார் பக்திப் பாடல்களை பிரதமர் நரேந்திர மோடி தாளமிட்டு கேட்டு ரசித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
நிறைவு விழா நடைபெறும் மாதப்பூருக்கு காரில் ஊர்வலமாக வந்த மோடி, பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஓய்வறைக்குச் சென்றார். அங்கு ஜெர்மனி பாடகி கசாண்ட்ரா ஸ்மிட்டிமனையும் அவரின் தயாரையும் சந்தித்தார்.
தமிழ் பக்திப் பாடல்களை தமிழ் மொழியில் பாடுபவர் பாடகி கசாண்ட்ரா ஸ்மிட்டிமன். பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியிலும் கசாண்ட்ராவைப் பற்றி பேசியுள்ளார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை கசாண்ட்ரா நேரில் சந்தித்தார். அப்போது கிருஷ்ணர் பாடலையும், தமிழில் அண்ணாமலையார் பாடலையும் பாடினார். அதனை தாளமிட்டு ரசித்தவாறு கேட்டார் பிரதமர் மோடி. இது தொடர்பான விடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.