திமுகவின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் திமுக சார்பில் திண்ணைப் பிரசாரம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம் தோறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று உத்திரமேரூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் வாரிய கழகத் தலைவர் லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உத்திரமேரூர் அதிமுக தொண்டர் குமார் என்பவர் கூட்டத்தில் நுழைந்து கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு நிலவியது.
இதனிடையே அவர் மீது திமுக சார்பில் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுதாக புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் உத்திரமேரூர் காவல்துறையினர் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தகவல் அதிமுகவினரிடையே பரவியது.
மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் உத்திரமேரூர் காவல் நிலையம் முன்பு குவிந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற அதிமுக தொண்டரை விடுவிக்கக் கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் அதிமுகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.