தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று(பிப்.28) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 11 வகையான பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டது. 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(பிப்.28) கடைசி நாளாகும்.
விண்ணப்பங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4 முதல் மார்ச் 6 தேதிக்குள் திருத்தங்களைச் செய்ய வேண்டும். குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 18 முதல் 37 வயதுடையவர்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் இன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.