சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் விற்பனை!

சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் விற்பனை!

சென்னை: சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து மாநகரப் பகுதிகளுக்கு இன்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பக்கெட்டுகள் சுமார் 70 கிராம் அளவுக்கு எடை குறைவாக இருந்ததாக முகவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட செய்தி:

"அம்பத்தூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று (02.01.2024) அதிகாலையில் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் கொண்ட பால் முகவர் ஒருவர், தான் கொள்முதல் செய்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்தையும் (180லிட்டர்) ஒவ்வொன்றாக எடை போட்டுப் பார்த்ததில் 518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் 448, 449, 450 கிராம் என சுமார் 70 கிராம் வரை மிகவும் எடையளவு குறைவான நிலையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவது என்பது பால் பண்ணையில் உள்ள தரக்கட்டுப்பாடு, மேற்பார்வை அதிகாரிகள், பால் பண்ணை பொதுமேலாளர், உதவி பொது மேலாளர், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனும்போது தொடர்ந்து எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விநியோகம் செய்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது உறுதியாகிறது.

ஏற்கெனவே கடந்தாண்டு வேலூர், சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் இதே போன்று 450 கிராம், 470 கிராம் என எடையளவு மிகவும் குறைவான நிலையில் இருந்ததும், அவ்வாறு எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து, விநியோகம் செய்த அதிகாரிகள், ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அது மீண்டும் தொடர்கதையாகி வருகிறது.

மேலும் தற்போது அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையின் உதவி பொது மேலாளராக இருக்கும் சிவக்குமார், வேலூரில் பணியில் இருந்தபோது தான் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்லப்பட்ட முறைகேடுகள் அரங்கேறியது. ஆனால் அந்த முறைகேடுகள் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததோடு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் அவர் அம்பத்தூர் பால் பண்ணைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு வேலூர் சம்பவம் போன்றே கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கும் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் சென்று முறைகேடுகள் நடைபெற்ற நிலையில் வேலூரை போன்றே அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சம்பவமும் மூடி மறைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது அதனை ஈடுசெய்ய சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 25 ஆயிரம் லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகளில் சுமார் 9,400 லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் மாயமான நிலையில் அதற்கு பொறுப்பாளரான உதவிப் பொது மேலாளர் சிவக்குமார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தற்போது எடையளவு குறைவான அளவில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல் முறையான விசாரணைக்கு உட்படுத்தி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மீதும், குறிப்பாக பொதுமேலாளர், உதவி பொது மேலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com