புதுச்சேரி: 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி, ஆங்கிலேயர் படையெடுப்பு, பிரெஞ்சுகாரர்களால் மீட்டுருவாக்கம் என வரலாற்று பின்னணியை கொண்ட 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகை உறுதித்தன்மையை இழந்ததால் பாதுகாப்பு கருதி இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை பரிந்துரை செய்தது.
இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து தற்காலிகமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் இளம் மருத்துவர்கள் தற்கொலையின் அதிர்ச்சி தரும் பின்னணி
ஆளுநர் மாளிகை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பின்னர் 1963 -ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையாக செயல்பட்டு வந்த ராஜ்நிவாஸில் ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.