தமிழகத்துக்கு போதிய நிதி அளிக்கவில்லை: மத்திய நிதியமைச்சருக்கு தங்கம் தென்னரசு பதில்

தமிழகத்திலிருந்து வரிகள் மூலம் அதிகளவு வருவாய் மத்திய அரசுக்கு சென்றாலும், குறைந்த அளவே மாநிலத்துக்கு திரும்பக் கிடைக்கிறது; போதிய நிதி அளிக்கப்படுவதில்லை
தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)
தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)

சென்னை: தமிழகத்திலிருந்து வரிகள் மூலம் அதிகளவு வருவாய் மத்திய அரசுக்கு சென்றாலும், குறைந்த அளவே மாநிலத்துக்கு திரும்பக் கிடைக்கிறது; போதிய நிதி அளிக்கப்படுவதில்லை என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நிதி ஆணையத்தின் விதிப்படியே மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து வழங்கப்படுகிறது.

இதில் அரசியல் நோக்கம் இல்லை. தமிழகத்துக்கு மத்திய அரசால் 2014 முதல் 2023 மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடி. இந்த தொகைக்கான மானியமாக ரூ. 2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து பெற்றதைவிடவும் அதிகமாக கொடுத்திருக்கிறோம்' என்றார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை  அளித்த பேட்டி:

கடந்த 2014 முதல் 2023 மார்ச் வரை தமிழ்நாட்டிலிருந்து ரூ.6.23 லட்சம் கோடி நேரடி வரி வருவாயாக மத்திய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் தமிழகத்துக்கு மத்தியிலிருந்து கிடைப்பது 29 பைசாதான். 

ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. 2014}இல் இருந்து 2023 மார்ச் வரை உத்தரப் பிரதேசத்திலிருந்து ரூ.2.23 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கொடுத்ததில், ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்ட நிதி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் ரூ.63 ஆயிரத்து 246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 50 சதவீத நிதியை மத்திய அரசு தரவேண்டும். 

இந்த திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்று வரை அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு ஒரு வீட்டுக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கிறது. தமிழக அரசு ரூ.1. 68 லட்சம் வழங்குகிறது. மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிக பங்களிப்பை வழங்குகிறது. 

பெற்ற வரியை விட இரண்டு மடங்காக நிதி கொடுத்துள்ளதாக கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு  கூறுகிறது. ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை.

வெள்ள நிவாரணம் தரவில்லை: மிக்ஜம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. இதனால் மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ. 2 ஆயிரத்து 27 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாகப் பணிகளை நிறைவுசெய்ய முடியும். 

தமிழக அரசு வாங்கும் கடன்களை முதலீட்டுக்குள் கொண்டு வருகிறது. கடன் வாங்கும் தன்மையை தமிழக அரசு எப்போதும் சரியாக மேலாண்மை செய்து வருகிறது என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com