சீர்காழியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 24 செ.மீ. மழை பெய்துள்ளது.
அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஜன.8) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாலை 4 மணி வரை பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தெண்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2 நாள்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும். தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சீர்காழி 24 செ.மீ., சிதம்பரம் 23 செ.மீ., வேளாங்கண்ணி 22 செ.மீ., திருவாரூர், நாகையில் தலா 21 செ.மீ., கொள்ளிடம், புவனகிரியில் தலா 19 செ.மீ., நன்னிலம் 17 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.