சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால், சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஜன.8) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நண்பகல் 1 மணி வரை பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில், கிருஷ்ணகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.