சென்னை: தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கோரிக்கையை ஏற்று, அனைத்து அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க : பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்
ஏற்கெனவே, அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, குடும்ப அட்டைதாரா்களிடம் டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.
இதனிடையே, அரிசி அட்டைதாரர்கள் பலருக்கும் ரூ. 1000 பட்டியலில் பெயர் இல்லை என்று நியாயவிலைக் கடைக்காரர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், பெரும் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து, அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முறைப்படியான அறிவிப்பு, அரசாணை வெளிவராத நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில், சர்க்கரை மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களுக்கும்கூட ரூ. 1000 வழங்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகிப் பரவின.
டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் ஜன.14-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொங்கல் திருநாளுக்குள் அனைத்துக் அரிசி அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.