ஞானபுரி சங்கடஹர ஸ்ரீ மங்கள மாருதி 33 அடி உயர ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விஸ்வரூப ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி சித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இங்கு 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு.
ஆஞ்சனேய சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும். சிறப்பு வாய்ந்த கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அடுத்து ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மஹா சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள், 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சனேய சுவாமிக்கு விசேஷ அர்ச்சனைகள் நடந்தது. கோலாலமாக நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆஞ்சனேயர் சன்னதியில் மகா ஸ்வாமிகள் பக்தர்களுக்கு ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்த ஒரு ரூபாய் நாணயத்தைப் பிரசாதமாகக் கொடுத்து, அருளாசி வழங்கி பேசினார். மாலை ஆஞ்சனேய சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மஹா சுவாமிகளின் முன்னிலையில் சிறப்பு யாகங்கள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. ஸ்ரேயன் ஶ்ரீராம், சம்ஹிதா குழுவினரின் மாண்டலின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகளைக் கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமௌலீஸ்வரர் ஆகியோர் செய்து இருந்தனர்.