சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களையும், பேருந்துகளின் செயல்பாடுகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அங்குள்ள பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களிடம் பேருந்துகளை மிகவும் கவனத்துடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, பயணிகளிடம் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்தும், நிறை குறைகள் குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது, கிளாம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் வர கடும் சிரமத்தைச் சந்திப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
பயணிகளின் கோரிக்கையை பரிசீலித்த அமைச்சா், கிளாம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து முனையத்துக்குள் செல்லும் வகையில் சில நாள்களுக்கு மட்டும் கட்டணமில்லா பேருந்து சேவை இயக்கப்படும் என உறுதியளித்ததுடன், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக தேவையான பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின்னா், இப்போது தான் முதன்முதலாக பண்டிகை கால பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதில் சில சிறு பிரச்னைகள், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். இந்தப் பிரச்னைகள், குழப்பங்கள் விரைவில் தீா்க்கப்படும். பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இயக்கப்படும் சில வழித்தட பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகிறது
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.