பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சாலையோரம் இருந்த தடுப்பில் சனிக்கிழமை காலை கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
துாத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி (31), இவரது மகன் சந்தோஷ் செல்வம் (7)அதேப் பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா(40), ராணி (40), ஞானம்மாள் (60), பாக்கியராஜ் (62) ஓட்டுநர் சின்ன பாண்டி(40) ஆகிய 11 பேரும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் சந்தோஷ் செல்வத்திற்கு முடி இறக்குவதற்காக வெள்ளிக்கிழமை இரவு டவேரா காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க.. ஐஐடி-சென்னையில் 720 ஆன்லைன் படிப்புகள்
சனிக்கிழமை அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனேரா பகுதியில் கார் வந்துக்கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
இதையும் படிக்க.. மௌத் ஆர்கன் வாசித்து மோடியின் மனதைக் கவர்ந்த ஆண்டாள் யானை
இதில், ராணி, ஓட்டுநர் சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து 108 உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மேலும் பலத்த காயமடைந்த 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.