திண்டுக்கல்: பழநி முருகனைத் தரிசிக்க ஆண்டுதோறும் 21 நாள் பயணமாக குன்றக்குடியில் இருந்து பாதயாத்திரையாகவே பழநிக்குச் செல்லும் நகரத்தார் காவடிகள் சனிக்கிழமை நத்தத்தைக் கடந்துள்ளனர்.
331 சர்க்கரை காவடிகளைத் தாங்கிய 76 ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை காலை நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு பானகபூஜை நிகழ்ந்தது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் நத்தம் மாரியம்மன் கோவில்தெரு , பெரியகடை வீதி, பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பாதைகளின் வழியாக பழநி நோக்கி தங்களது யாத்திரையைத் தொடங்கினர்.
இவர்கள் செல்லும் பாதை என்பது 400 ஆண்டுகளுக்கு முன்பு பழநிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் பயன்படுத்திய அதே பாதை என்பது ஆச்சரியத்துக்குரிய ஒன்று.
ஜன.25 தைப்பூசத்தன்று பழநி சென்றடையும் காவடிகள், ஜன.28 மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்தி வழிபாடுகளை நிறைவு செய்வார்கள்.
நெற்குப்பை, கண்டனூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் பழநி முருகனைத் தரிசிக்க ஆண்டுதவறாது செல்கின்றனர். தரிசனம் முடித்து திரும்பும்போதும் நடைபயணமாகவே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.