மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் விரைவாகவும் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கும் வகையில் தொடர்ந்து பல புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேரடியாக டிக்கெட் எடுக்கச் செல்லும் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலமாக டிக்கெட் பெறும் வசதி நிறுவப்பட்டுள்ளது.
காகிதமற்ற டிக்கெட் என்ற முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், விரைவாகவும் பயணிகள் டிக்கெட் பெறலாம். பயணிகளின் செல்போனில் டிக்கெட் விவரம் வந்துவிடும். இதனால் டிக்கெட்டை பத்திரப்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
இதனை செயல்படுத்தும் முறை குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவுடன் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிக்க.. ரத்தப் புற்றுநோய் பாதித்த சிறுவனைக் கொன்ற மூட நம்பிக்கை
அதில், பயணி தான் செல்ல வேண்டிய ரயில்நிலையத்தின் பெயரைச் சொல்லி அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணத்தை ரொக்கமாகவோ, ஜிபே அல்லது போன் பே மூலமாகவும் அளிக்கலாம்.
பணம் செலுத்தியதும், அங்கிருக்கும் இயந்திரத்தில் உங்கள் செல்ஃபோன் எண்ணை பதிவிட்டதும், உங்கள் வாட்ஸ் ஆப்புக்கு டிக்கெட் க்யூஆர் கோடுடன் வந்துவிடும். அவ்வளவுதான்.. நீங்கள் ரயிலில் பயணிக்கலாம்.
ஏற்கனவே வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இதில், டிக்கெட் கவுண்டருக்கே செல்ல வேண்டாம். பயணிகள் தங்கள் கைப்பேசி வாட்ஸ்ஆப் மூலம் 8300086000 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மொழி, புறப்படும் இடம், சேரும் இடம், டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஜிபே, நெட்பேங்கிங் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.
ஆனால், இப்போது வந்திருப்பது நேரடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாட்ஸ் ஆப்பில் பெறுவதாகும்.