நாடு முழுவதும் 75 ஆவது குடியரசு நாள் விழா கோலாகலமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 75 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர் அணி வகுப்பு மரியாதை பார்வையிட்டு பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 211 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், காவல்துறையில் 24 காவலர்களுக்கு முதல்வரின் காவலர் பதக்கங்களையும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 29 காவலர்கள் என மொத்தம் 264 அரசு அலுவலர்கள் காவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.