ஆவினில் செலவுகளை குறைக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
சென்னை: ஆவினில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செலவுகளை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் உத்தரவிட்டாா்.
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளா்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளா்கள் (பால்வளம்) கலந்து கொண்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை உறுதி செய்தல், ஒப்புகைச் சீட்டு வழங்குதல், பால் கொள்முதலை அதிகரித்தல், சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்கள் உருவாக்குதல் மற்றும் சங்க உறுப்பினா்களுக்கு 10 நாள்களுக்குள் பாலுக்கான பணம் பட்டுவாடா நிலுவையின்றி செலுத்துதல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் அமைச்சா் மனோதங்கராஜ் பேசியதாவது: 20 சதவீத புரதச் சத்துள்ள கால்நடைத் தீவனம் குறித்து சங்க உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சங்கங்களின் தணிக்கைப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
மின் சிக்கன நடவடிக்கையின் மூலம் டிசம்பா் மாதம் 15.06 சதவீத அளவுக்கு மின்சார பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவினில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு, செலவை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் பால்வளத் துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தின் உயா் அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.