
ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் கருணாநிதிக்கு புனிதர் பட்டம் கட்டப் பார்க்கிறார்கள் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் காவல்துறையினரால் தென்காசி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கொலை செய்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காகப் பாய்கிறது.
என்னைவிட சாட்டை துரைமுருகன் அவதூறாகப் பேசிவிட்டாரா என்ன? என்னைக் கைது செய்யுங்கள் பார்ப்போம். என்னைச் சுற்றியிருப்பவர்களைக் கைது செய்து எனக்கு நெருக்கடி தர நினைக்கிறார்கள்.
கருணாநிதி குறித்தப் பாடலை மேடையில் பாடியதற்காகக் கைது செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலைப் எழுதியவர், பாடியவரைக் கைது செய்தார்களா? இப்போது நான் அந்தப் பாடலைப் பாடுகிறேன். என்மேல் வழக்குப்பதிவு செய்யுங்கள்” என்று கூறிய சீமான் கருணாநிதி குறித்த அவதூறுப் பாடலை பத்திரிகையாளர்கள் முன்பு பாடிக் காட்டினார்.
மேலும், “அதிகாரத்துக்கு வந்தவுடன் உங்கள் தந்தைக்கு புனிதர் பட்டம் கட்டப் பார்க்கிறீர்கள். அவர் தமிழின துரோகி. முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை ஸ்டாலின் பேசிய அவதூறுகள் குறித்தக் காணொளிகள் இருக்கிறது. உங்கள் கட்சிக்காரர்கள் பேசினால் கருத்துரிமை. நாங்கள் பேசினால் அவதூறா? உங்கள் தந்தை என்ன இறைதூதரா?” என்று முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துப் பேசினார் சீமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.