
கு.வைத்திலிங்கம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, இந்தத் தொகுதியை தக்க வைத்துள்ளது. இந்தத் தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்திருந்த நிலையில், அந்தக் கட்சியினரின் வாக்குகள் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் என்ற பாமகவின் நம்பிக்கையும் பொய்த்துப் போயிருக்கிறது. மற்றொரு கட்சியான நாம் தமிழர் கட்சியும் வைப்புத் தொகையை இழந்திருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10}ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தலை அதிமுகவும், தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்தன. திமுக சார்பில் அன்னியூர் அ.சிவாவும், பாமக சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ. அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர்.
இடைத்தேர்தல் முடிவில் பாமக வேட் பாளரை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று, முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திமுகவின் அன்னியூர் அ.சிவா. இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு 1,24,053 வாக்குகளும், பாமகவின் அன்புமணிக்கு 56,296 வாக்குகளும், நாதகவின் அபிநயாவுக்கு 10,602 வாக்குகளும் கிடைத்தன.
வெற்றிக்கு உதவிய உத்தி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே அமைச்சர் க.பொன்முடி, கொள்கைப் பரப்புச் செயலர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் தலைமையில், அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட் டது. கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சா.சி.சிவசங்கர் உள்ளிட்ட ஒவ்வொரு அமைச்சருக்கும் கட்சி ரீதியிலான ஒன்றியப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது.
நாள்தோறும் தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதிக்கான வாக்காளர்களை காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடைசி 2 நாள்கள் பிரசாரம், கூட்டணிக் கட் சித் தலைவர்களான தொல்.திருமாவளவன்,கு.செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், ஆர்.முத்தரசன், கே.எம்.காதர் மொகிதீன், எம்.எச்.ஜவாஹிருல்லா போன்றோரின் பிரசாரம் அன்னியூர் சிவாவுக்கு சாதகமாக அமைந்தன.
திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம்: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வேட்பாளர் நா.புகழேந்தி 48.69 சதவீத வாக்குகளை (93,730) பெற்றிருந்த நிலையில், 2024 இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா 63.22 சதவீத வாக்குகளை(1,24,053) பெற்றிருக்கிறார். 2019 இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர். முத்தமிழ்ச்செல்வன் 60.29 சதவீத வாக்குகளை (1,13,766) பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் இந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
பாமகவின் பிரசாரம்: இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு போன்ற முக்கிய பிரச்னைகளை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது பாமக. திமுகவை போலவே பாமகவின் தேர்தல் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.அண்ணாமலை, ஜி.கே.வாசன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜான்பாண்டியன், ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் பாமக வேட்பாளருக்காக பிரசாரம் செய்தனர்.
பாமகவின் வாக்குகள் உயர்வு: தற்போதைய இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கு 56,296 வாக்குகள் (28.69 சதவீதம்) கிடைத்திருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.முரளிசங்கர் 32,198 வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 24,098 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன.
அதிமுக வேட்பாளர் ஆர். முத்தமிழ்ச்செல்வன் 2021 பேரவைத் தேர்தலில் 84,157 வாக்குகளையும் 2019 இடைத்தேர்தலில் 1,13,766 வாக்குகளையும் பெற்றதில் பாமகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
ஏறுமுகத்தில் நாதக வாக்குகள்: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளை (4.27 சதவீதம்) பெற்ற நிலையில், 2024 இடைத்தேர்தலில் கட்சியின் அக்கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய பொ.அபிநயா 10,602 வாக்குகளை(5.40 சதவீதம்) பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் முந்தைய தேர்தலை விட, இம்முறை நாம் தமிழர் கட்சி 2,386 வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறது.
அதிமுக வாக்குகளின் கதி: இடைத்தேர்தலை அதிமுகவும், தேமுதிகவும் புறக்கணித்த நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் பாமக வேட்பாளரை பொது வேட் பாளராகக் கருதி ஆதரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டனர். இதேபோல அதிமுகவினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ஆதரவு கோரப்பட்டது.
ஆனால், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வந்ததையும், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்காமல், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதையும் அதிமுகவினர் விரும்பவில்லை.
மேலும், திமுகவை வீழ்த்த பாமக வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலையில் இருந்தாலும், அண்ணாமலையின் பேச்சால் பாமகவுக்கு வாக்களிக்க அதிமுகவினர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், அதிமுக தலைமையின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் அக்கட்சியின்அனுதாபிகள் கணிசமான அளவில் திமுகவுக்கு சாதகமாக வாக்களித்திருக்கக் கூடும் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இதேபோல, பாமகவுக்கும் அதிமுக அனுதாபிகளின் வாக்குகள் கிடைத்திருக்கலாம். அதேசமயம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் சென்றடையவில்லை.
எடுபடாத இடஒதுக்கீடு பிரசாரம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு மீண்டும் கிடைக்க வேண்டுமெனில் இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி பிரசாரத்தை முன்வைத்தார். ஆனால், 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொகுதி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
கூட்டணி பலம், அமைச்சர்களின் தீவிர தேர்தல் களப்பணி, வாக்காளர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற காட்டிய முனைப்பு, அதிமுகவினரின் வாக்குகள் குறிப்பிட்ட அளவில் கிடைத்தது, வாக்குச்சிதறல்கள் போன்றவை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்கொடியை நாட்ட திமுகவுக்கு உதவியிருக்கின்றன என்றுதான் கூற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.