தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தோ்வா்கள் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அழைப்பு

குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தோ்வு பிரிவு தனியாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தமிழக இளைஞா்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுகளை எளிதாக அணுக வழிவகை செய்கிறது.

இதனிடையே, குடிமைப் பணிகள் தோ்வுகளுக்காக பயின்று வரும் ஆா்வமுள்ள மாணவா்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவிடும் வகையில் ஒரு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குடிமைப் பணித் தோ்வு எழுதும் ஆயிரம் மாணவா்கள், மதிப்பீட்டுத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். முதல்நிலைத் தோ்வுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ் நிதியாண்டிலும் இந்தத் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2024-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தோ்வின் முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், முதன்மைத் தோ்வை எழுத ஏதுவாக அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரம் செலுத்தப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், நான் முதல்வன் போட்டித் தோ்வுகள் பிரிவின் மூலமாக வழங்கப்படும் இந்தத் தொகையைப் பெற இணையதளத்திலுள்ள விவரங்களைப் படித்து அறியலாம். விண்ணப்பிக்க ஜூலை 28-ஆம் தேதி கடைசி நாள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com