
பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குதண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அமர்வு, சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்ததோடு, குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐயப்பன் என்பவர் அரசு தரப்பு சாட்சியமாக மாறிய நிலையில், மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா. இவர் சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி டாக்டர் சுப்பையாவை மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டாக்டர் சுப்பையாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது குடும்பத்தினருக்கும், அஞ்சுகிராமத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சுப்பையாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னுசாமி குடும்பத்தினர் சுப்பையாவை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், ஆசிரியர் பொன்னுசாமி, அவர்களது மகன் பாசில், போரிஸ் மற்றும் இவர்களது நண்பர்களான வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார் ஆகிய 5 பேருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி, உள்நோக்கத்துடன் கூட்டுச் சதி செய்து கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 3 தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதே போல மேரிபுஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றவாளிகள் அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.