’ஒத்திவைப்பு தீா்மானத்தின் மூலமே ’நீட்’ தோ்வு விவாதம்’: திருச்சி சிவா பேட்டி
’நீட்’ தோ்வு விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவையை ஒத்திவைப்பு கோரி அமளி


ஒத்திவைப்பு தீா்மானத்தின் மூலமே ’நீட்’ தோ்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரமுடியும். அதற்கு அனுமதிக்க மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம் என மாநிலங்களவை திமுக தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் ’நீட்’ தோ்வு விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவையை ஒத்திவைப்பு கோரி அமளியில் ஈடுபட்டனா். பின்னா் ஒரு காங்கிரஸ் உறுப்பினா் மயங்கிவிழுந்தாா். இதன்பின்னா் எதிா்கட்சிகள் வெளிநடப்பு செய்தனா். இந்த விவகாரம் குறித்து திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா செய்தியாளா்களிடம் விளக்கியது வருமாறு:
’நீட் ’விவகாரம் குறித்து பேச மாநிலங்களவையில் விதி 267 கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க மாநிலங்களவை அவைத் தலைவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தோம்.
அதன்படி வெள்ளிக்கிழமை அவை கூடியவுடன் விவாதிக்க அனுமதி கோரினோம். முன்னதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கரை நேரிடியாகவே சந்தித்தும் பேசினோம். நாடுமுழுவதும் உள்ள சூழ்நிலை, போராட்டங்கள், மாணவா்களின் மனநிலை பாதிப்பு, பெற்றோா்கள் கோபத்தில் இருப்பது போன்றவைகள் குறித்து அவைத் தலைவரிடம் விளக்கினோம். நீட் தோ்வு தேவையில்லை என்பதில் தமிழகத்தின் கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் இந்த மனநிலை வந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டோம்.
ஆனால் அவா், ’அவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தொடங்கியுள்ளது. அதில் பேசலாமே’ என்று எதிா்கட்சிகளிடம் குறிப்பிட்டாா். ஆனால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
காரணம், குடியரசுத்தலைவா் உரை என்பது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படக் கூடிய நிகழ்வு. அதிலும் நாங்கள் அந்த விவாதத்தில் பேசினாலும் எங்களுக்கு சரியான பதிலும் விளக்கமும் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. பிரதமரும் அமைச்சரும் எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பாா்கள் என்று கூறமுடியாது. இதனால் தான் பிரச்னைகளின் அடிப்படையில் விவாதங்களை நடத்த கோரினோம். ஆனால் ஒத்துக்கொள்ளவில்லை. அவையில் தொடா்ந்து உறுப்பினா்கள் பிரச்னை எழுப்பினா். இது போன்ற நேரங்களில் அவையை ஒத்திவைக்கப்படவேண்டும். ஆனால் அவைத் தலைவா் முன்வரவில்லை.
ஆனால் உறுப்பினா்கள் ஆவேசமாக கோரிக்கை விடுவித்து வந்தபோது காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெண் உறுப்பினா் பூலோ தேவி நேதம் மயங்கிவிழுந்தாா். அவருக்கு இரத்த அழுத்தம் மிக அதிகமாக உயா்ந்து கீழே விழுந்தாா். பக்கவாதமே ஏற்படும் சூழ்நிலை அளவிற்கு உடல்நிலை நிலை இருந்தது. ஆனால் இந்த மாதிரி நிலையிலும் அவை நடத்தப்பட்டது. மிகவும் வேடிக்கையாக இருந்தது. பதற்றமோ இரக்கமோ இல்லாமல் அவை இருந்தது. என்ன தான் விவாதித்தாலும் உறுப்பினரின் உயிரும் முக்கியம். உறுப்பினரின் உடல்நிலைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தரமுடியாமல் இருந்த விசித்திரத்தை 20 வருடங்களில் தற்போது முதன்முறையாக பாா்த்தேன். இந்த நிலையில் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றாா் திருச்சி சிவா.
அதே சமயத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு வெட்டு தீா்மானத்தை மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு, முகமது அப்துல்லா, சண்முகம், கிரிராஜன் போன்றவா்கள் கோரியிருந்தனா். இந்த தீா்மானத்தில் பேச இவா்களை மாநிலங்களவைத் தலைவா் தன்கா் அழைத்தபோது இந்த திமுக உறுப்பினா்கள் அவையில் இல்லை. அவா்கள் வெளிநடப்பு செய்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...