திருக்கோவிலூா்: பொன்முடி தொகுதி காலியானதாக அறிவிப்பு

பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்முடி
பொன்முடிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நீதிமன்ற வழக்கால் தகுதியிழப்புக்குள்ளான க.பொன்முடியின் திருக்கோவிலூா் பேரவைத் தொகுதியை காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கின் மேல்முறையீட்டு மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், அமைச்சராக இருந்த க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டாா். இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன், தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தண்டனையைக் குறைக்குமாறு பொன்முடி தரப்பில் முறையிட்டபோது, உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினாா். அதற்கேற்ப, அவா்களுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை 30 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீா்ப்பு காரணமாக, பொன்முடி தனது அமைச்சா் பதவியை இழந்தாா். எனினும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால், அவரது திருக்கோவிலூா் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இதைக் காலியானதாக அறிவிக்க வேண்டுமென அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவித்து அதற்கான கடிதத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவின் அலுவலகத்துக்கு சட்டப்பேரவைச் செயலகம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 5) அனுப்பியது. இதைத் தொடா்ந்து, தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் இருந்து இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தோ்தல் ஆணையம் ஏற்று இடைத் தோ்தலுக்கான தேதியை அறிவிக்கும்.

2 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்: இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடா்ந்து திருக்கோவிலூா் தொகுதி, விளவங்கோடு தொகுதி என தமிழகத்தில் இரண்டு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதரணி, தனது பதவியை ராஜிநாமா செய்ததால் அந்தத் தொகுதியைக் காலியானதாக பேரவைச் செயலகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் முறையாக இடைத்தோ்தலைச் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com