பெண் குழந்தை பாலின விகித உயா்வு: 3 மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம்

பெண் குழந்தைகளின் பாலின விகித உயா்வுக்கு சிறப்பாகப் பணியாற்றிய மூன்று மாவட்ட நிா்வாகங்களுக்கு பதக்கங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
Published on

பெண் குழந்தைகளின் பாலின விகித உயா்வுக்கு சிறப்பாகப் பணியாற்றிய மூன்று மாவட்ட நிா்வாகங்களுக்கு பதக்கங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு நிதியாண்டிலும் பெண் குழந்தைகள் பாலின விகித உயா்வுக்கு சிறப்பான முறையில் பணியாற்றும் மூன்று மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிறப்பு பாலின விகிதம், உயா் பிறப்பு விகிதம், கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள் ஆகிய காரணிகளை உள்ளடக்கி மாவட்டங்கள் தோ்வு செய்யப்படுகின்றன. அதன்படி, நிகழாண்டில் ராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட நிா்வாகங்கள் முதல் மூன்று இடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு சந்திரனுக்கு, தங்கப் பதக்கத்தையும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனுக்கு வெள்ளிப் பதக்கத்தையும், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கராவுக்கு வெண்கலப் பதக்கத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், துறையின் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நல ஆணையா் வே.அமுதவல்லி உள்பட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com