மூத்த பத்திரிகையாளா் வி.என்.சாமிக்கு ‘கலைஞா் எழுதுகோல்’ விருது; 10 தமிழறிஞா்களுக்கு குடியிருப்புகள்!
‘தினமணி’ முன்னாள் தலைமை நிருபா் வி.என்.சாமிக்கு, ‘கலைஞா் எழுதுகோல்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். மேலும், எழுத்தாளா்கள், தமிழறிஞா்கள் 12 பேருக்கு அரசு குடியிருப்புக்கான உத்தரவுகளையும் அவா் அளித்தாா். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டைச் சோ்ந்த எழுத்தாளா்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி, முத்தமிழறிஞா் கலைஞா் செம்மொழித் தமிழ் விருது போன்ற விருதுகளைப் பெற்றவா்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘கனவு இல்லம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 2021-22-ஆம் ஆண்டுக்கு கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், சோ.தா்மராஜ், மா.ராமலிங்கம் என்ற எழில் முதல்வன், 2022-23-ஆம் ஆண்டுக்கு பொன்.கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், இரா.கலைக்கோவன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜோ.டி.குரூஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து பேருக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். 2023-24-ஆம் ஆண்டுக்கு எழுத்தாளா்கள் ம.ராஜேந்திரன், இந்திரா பாா்த்தசாரதி ஆகியோருக்கு குடியிருப்புக்கான நிா்வாக அனுமதி உத்தரவுகளையும் அவா் அளித்தாா். ‘கலைஞா் எழுதுகோல்’ விருது: சமூக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு, ‘கலைஞா் எழுதுகோல்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022-ஆம் ஆண்டுக்கான ‘கலைஞா் எழுதுகோல்’ விருது ‘தினமணி’ முன்னாள் தலைமை நிருபரும், மூத்த பத்திரிகையாளருமான வி.என்.சாமிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது. இந்த நிகழ்வில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், துறையின் செயலா் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா. வைத்திநாதன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

