பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ. 1,273 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை புதன்கிழமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கோவை மாவட்டத்துக்கான அறிவிப்புகள்:
தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மரங்களை வெட்டி அகற்றுவதற்காக 14 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
3 இலட்சம் தென்னங்கன்றுகள், 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அகில இந்திய அளவில் தேங்காய் விற்பனை செய்வதற்கான உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் செயல்படுகிற 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் வெளி மாநில வணிகர்களோடு தொடர்பு ஏற்படுத்தி, வெளிப்படைத் தன்மையோடு வணிகர்கள் மற்றும் வேளாண் பெருமக்கள் நேரடியாக விற்பனையில் கலந்து கொள்வதை ஊக்குவித்து, தென்னை விவசாய பெருமக்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், வங்கி பரிவர்த்தனை மூலமாக அவர்களுடைய வங்கி கணக்குக்கு உடனடியாக வரவு வைக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
தென்னை விவசாயின் நலன் கருதி, கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்களின் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கிலோ மீட்டர் நீளத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.
வார்டு எண் 11 மூங்கில் மடை குட்டை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும்.
மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட வாளையார் வனப்பகுதியில் தரைமட்ட குடிநீர்த் தொட்டி கட்டித் தரப்படும்.
காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டுல சாலை சீரமைக்கப்படும்.
இக்கரை பூளுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் - திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் மாவுத்தம்பதி ஆகிய ஊராட்சிகளில் நான்கு பாலங்கள் கட்டப்படும்.
15 அங்கன்வாடி மையங்கள் –18 நியாயவிலைக் கடைகள் – 14 சமுதாய நலக் கூடங்கள் – 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் சாலை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தால் அகற்றப்பட்ட பேருந்துநிலையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமுறையில் சீரமைக்கப்படும்.
ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டுத் தரை அமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்துக்கான அறிவிப்புகள்:
சோலார் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படும்.
வ.உ.சி பூங்கா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தித் தரப்படும்.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படும்.
புதிய மாவட்ட மைய நூலகம் ஒன்று 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சி தாளவாடி ஊராட்சி ஒன்றியம் தலமலை ஆசனூர் ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கும் இணைப்புச் சாலை வசதி இல்லாத அந்த 9 கிராமங்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்தப்படும்.
8 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும்.
சத்தியமங்கலம் நகராட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மஞ்சள் மற்றும் மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய ஏதுவாக குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெருந்துறை கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்திட ஈரோடு மாவட்டத்தில், தொல்லியல் துறையின் மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்துக்கான அறிவிப்புகள்:
பெருமாநல்லூர் சாலையில், நல்லாற்றில், பொம்மநாயக்கன் பாளையம் மற்றும் போயம்பாளையம் சாலை வரை மற்றும் பிச்சம்பாளையம் மெயின் சாலை முதல் ராஜா நகர் வரை 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படும்.
திருப்பூர் மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் அமைக்கப்படும்.
கிராமப் பகுதிகளில் 8 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
13 சமுதாய நலக்கூடங்கள் 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக விபத்து மற்றும் எலும்புமுறிவு சிறப்பு மருத்துவமனை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்துக்கான அறிவிப்புகள்:
உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும். இதற்காக பெரணி இல்லம் புதுப்பித்தல், புதிய சுகாதார வளாகம் அமைத்தல், ஆர்க்கிட் மற்றும் போன்சாய் வளர்ப்புக்கூடம், வடிகால் கால்வாய் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
5 அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 2 கோடியே 50 இலட்சம் ரூபாயில் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.
தனியார் கட்டடங்களில் இயங்குகிற 10 நியாயவிலைக் கடைகளுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் 2 சமுதாய நலக் கூடங்கள் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.