கரூா் மாவட்டம், கடவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 3.71 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தரகம்பட்டி ஊராட்சியில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் மற்றும் ஆதனூா் ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கணினி அறை கட்டுமான பணி, மேலப்பகுதி ஊராட்சியில் நாற்றுப்பண்ணையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 6.25 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 5,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி, கீழபகுதி ஊராட்சியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.4.43 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து தென்னிலை ஊராட்சியில் ரூ. 2.40 லட்சம் மதிப்பீட்டில் மாமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டடம் பழுது பாா்க்கும் பணிகளையும், ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமையல் கூடம் கட்டும் பணிகள் உள்பட மொத்தம் ரூ. 3.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றும் வரும் 9 வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய நேரத்துக்குள்ளாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்குமாா், மங்கையா்கரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.










