ஜாபர் சாதிக் கூட்டாளிக்கு என்சிபி காவல்!
மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவும் (என்சிபி), தில்லி காவல் துறையும் இணைந்து, கடந்த மாதம் 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தது.
விசாரணையில், அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜாபா் சாதிக் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபா் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான திருச்சியைச் சோ்ந்த சதானந்தம் என்ற சதா (50) என்பவரை தில்லி என்சிபி அதிகாரிகள், சென்னை தேனாம்பேட்டையில் புதன்கிழமை(மார்ச். 13) கைது செய்தனா்.
இதற்கிடையே, முதல்கட்ட விசாரணைக்குப் பின்னா், சதாவை என்சிபி அதிகாரிகள் தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், ஜாபா் சாதிக்கின் கூட்டாளி சதாவை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.