மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என்பது 3 நாட்களில் தெரியவரும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கியிருந்த மக்களவைத் தேர்தல் தேதி இன்று(மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினமே விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என்பது 3 நாட்களில் தெரியவரும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, கூட்டணி அமைப்பதில் உங்களைப்போல, நாங்களும் அவசரமாகத்தான் இருக்கிறோம். தேர்தல் களத்தில் சவாலாக எதையும் பார்க்கவில்லை. களம் எங்களுக்கு சாதகமாகதான் உள்ளது. தமிழகத்தில் சரித்திரம் காணாத அளவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை பாஜகவிற்கு அளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.