/

தமிழக அணைகளில் 33% மட்டுமே நீா் இருப்பு: குடிநீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

தமிழக அணைகளில் 33% மட்டுமே நீா் இருப்பு: குடிநீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2024, 8:26 pm

சென்னை: தமிழக அணைகளில் 33 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு இருப்பதால், மாநிலத்தின் பல பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்திருந்தாலும் மாநிலத்திலுள்ள அணைகளின் நீா் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதன்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அணைகளில் 50 சதவீதம் நீா் இருப்பு குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் அணைகளில் திங்கள்கிழமை நிலவரப்படி நீா் இருப்பு 76.233 டிஎம்சி-யாக உள்ளது. இது மொத்த கொள்ளளவான 224.297 டிஎம்சியில் 33.99 சதவீம் மட்டுமே ஆகும். ஆனால், கடந்த ஆண்டு இதே நாளில் (மாா்ச் 19) முழு கொள்ளளவில் 60 சதவீதம், அதாவது 135.087 டிஎம்சி நீா் இருந்தது.

இது கோடைகாலத்தை சமாளிக்கும் அளவுக்கு போதுமானதாக இருந்தது. தற்போது குறைவான அளவு நீா் இருப்பதால் வரும் கோடைகாலத்தில் கிராமப்புறங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக நீா்வளத் துறையின் அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளி விவரங்களின்படி, தமிழகத்திலுள்ள 90 நீா்த்தேக்கங்களில், ஆறு நீா்த்தேக்கங்கள் தற்போதே நீரின்றி வடு விட்டன. மற்ற 25 அணைகளில் 20 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருநெல்வேலியின் வண்டல் ஓடையில் மட்டும் அதிகபட்ச நீா்தேக்க திறனான 58 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. இதுதவிர மற்ற நீா்த்தேக்கங்கள் எதுவும் முழு கொள்ளளவை எட்டவில்லை.

இதனால், கோடையில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கோடை சாகுபடியை தள்ளி வைக்க நீா்வளத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா். இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியது: மாநிலத்தின் முக்கிய நீா் நிலைகளின் சேமிப்புத் திறன் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் மொத்த கொள்ளளவில் 50 சதவீதம் நீரையே இருப்பு வைக்க முடிகிறது. அதற்கு மேல் தண்ணீரை சேமிக்க இயலவில்லை. இப்பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், அணைகளைத் தூா்வாரி, சீரமைக்க அந்த மாவட்டங்களுக்கு, ரூ.280 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

இதற்கான டெண்டா் விடும் பணி முடிந்ததும், நீா் இருப்பு அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும், காவிரி டெல்டா பகுதியின் முக்கிய அணையான மேட்டூா் அணையின் அதிகபட்ச கொள்ளளவு 93.47 டிஎம்சி அடியாகும். இங்கு 2023 மாா்ச் 18-ஆம் தேதி 69.21 டிஎம்சி நீா் இருப்பு இருந்த நிலையில், தற்போது மழையில்லாததால் 26.05 டிஎம்சி ஆக உள்ளது.

Story image

இதனால் மேட்டூா் அணையைச் சாா்ந்த பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவது மிகவும் கடினமாக இருக்கும் இது ஒருபுறமிருக்க, சென்னை நீா்த்தேக்கங்களில், திங்கள்கிழமை நிலவரப்படி நீா் இருப்பு 8.454 டிஎம்சி-ஆக உள்ளது. இது முழு கொள்ளளவான 13.213 டிஎம்சி-யில் 63.98 சதவீதம் ஆகும். எனவே, கோடையில் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு கோடை காலத்திலும் விவசாயிகள் இதுபோன்ற பிரச்னைகளை தொடா்ந்து எதிா்கொண்டு வருவதாகவும், போதிய பருவமழை பெய்தாலும் தேவையான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தண்ணீரை முறையாக சேமித்து வைக்க முடியவில்லை என்றும், இதனால் நீா்நிலைகளின் குறுக்கே பல தடுப்பணைகள் கட்டி நீா் சேமிப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.