சென்னை: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில், தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 11 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மூத்த தலைவர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி, தஞ்சாவூர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தருமபுரி செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சேலம் செல்வகணபதி, தருமபுரி ஆ. மணி, தென்காசி(தனி) ராணி, ஆரணி தரணி வேந்தன், தேனி தங்க தமிழ்செல்வன், தஞ்சாவூர் முரசொலி, பெரம்பலூர் அருண் நேரு, பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, கள்ளக்குறிச்சி மலையரசன், கோவை கணபதி ராஜ்குமார், ஈரோடு பிரகாஷ் ஆகியோர் புதிய வேட்பாளர்களாக திமுக அறிமுகம் செய்துள்ளது.
இதில், கடந்த மக்களவைத் தேர்தலில் ஆரணி, தேனியில் காங்கிரஸும், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், ஈரோட்டில் மதிமுகவும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்
வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன், வேலூரில் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதுரை, தூத்துக்குடியில் கனிமொழி, நீலகிரியில் ஆ. ராசா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.