

ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர்கள் 3 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பாசார் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் மகன் சதீஷ்குமார்(20), கலியபெருமாள் மகன் பழனி(20), வேப்பூர் புதுமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன்(20). இவர்கள் மூன்று பேரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் நண்பர்களை பார்க்க சென்றனராம்.
பின்னர் இரவு சொந்த ஊரான பாசார் நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். திங்கட்கிழமை அதிகாலை சுமார் 1.15 மணி அளவில் ராமநத்தம் காவல் சரகம், ஆவட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சதீஷ் குமார், வெங்கடேசன் இருவரும் நிகழிடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து மூன்று பேர் சடலங்களையும் உடற்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.