கோவை: கோவை மாவட்டத்தில், கோவில்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சைபெற்று வந்த 20 வயது இளைஞர் மரணம் அடைந்தார்.
போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பி, வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கடுமையாக போராடியதால், அந்த இளைஞரின் கைகால்களை கட்டி வைத்தும், வாயில் துணியால் அடைத்தும் வைத்திருந்த நிலையில், மூச்சுத்திணறி இளைஞர் பலியானதாகக் கூறப்படுகிறது.
பலியான இளைஞர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சமுத்துவின் மகன் கிஷோர் (20) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு மாணவரான இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இவருக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்து மீட்க, அவரை கோவையில், கருவலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது பெற்றோர் அனுமதித்தனர்.
இந்த நிலையில், அவர் மரணம் அடைந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர், ஊழியர்கள், வார்டன், மனநல நிபுணர் அனைவரும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.