ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்

ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்
Published on
Updated on
1 min read

சென்னையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக திரைப்பட இயக்குநர் அமீருக்கு தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியது.

மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவும் (என்சிபி),தில்லி காவல்துறையும் இணைந்து, கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரினை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தது. விசாரணையில் அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது.

மேலும், கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தில்லியில் கடந்த 9-ஆம் தேதி தில்லியில் கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவரை தில்லி என்சிபி அதிகாரிகள், சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 13-ஆம் தேதி கைது செய்தனர்.

சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் கிடங்கில் தில்லி என்சிபி அதிகாரிகள் கடந்த 14-ஆம் தேதி சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் இரு நாள்கள் ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து, தில்லி என்சிபி அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அமீருக்கு அழைப்பாணை:

இந்த வழக்கில் ஜாபர் சாதிக் உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோரிடம் என்சிபி தொடர்ந்து விசாரணை செய்கிறது. இதன் ஒரு ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்பட இயக்குநருமான அமீருக்கு என்சிபி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதேபோல ஜாபர் சாதிக்குடன் உணவகம், ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பட்டுள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அழைப்பாணையின்படி, மூவரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தில்லியில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜாபர் சாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை அமீர் இயங்கி வந்தார். மேலும் அமீரும், ஜாபர் சாதிக்கும் இணைந்து கிழக்கு கடற்கரையில் உணவகம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக அமீர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

இதேபோல ஜாபர் சாதிக்குடன் தொழில் பங்குத்தாரர்களாக இருந்த வேறு சிலருக்கும் என்சிபி அழைப்பாணை அனுப்பி, விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com