புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது காங். வேட்பாளர் வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 இல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் சார்பில் வெ.வைத்திலிங்கமும், பாஜக சார்பில் ஆ.நமச்சிவாயமும், அதிமுக சார்பில் கோ. தமிழ்வேந்தனும், பகுஜன் சமாஜ் கட்சி அலங்காரவேலுவும் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற கூட்டணிக் கட்சியினரும், காங்கிரஸாரும் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜீவா நகர் பகுதியில், திறந்தவெளி ஜீப்பில் நின்று பிரசாரம் செய்த போது காங். வேட்பாளர் வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார்.
பிரசார வாகனத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அருகே இருந்த வீட்டில் ஓய்வெடுக்க வைத்தனர். 15 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் தனது பிரசாரத்தை வைத்திலிங்கம் தொடங்கினார். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.