சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் இரண்டு வெறி பிடித்த நாய்கள் கடித்ததில் 5 வயது குழந்தை பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
காயமடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக ரகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷாவும் பூங்காவின் உள்ளே ஒரு சிறு அறையில் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.
நேற்று காவலாளி ரகு உறவினர் ஒருவர் இறந்ததாகக் கூறி விழுப்புரம் சென்றுள்ளார். பூங்காவில் சோனியாவும் 5 வயது மகள் சுதக் ஷாவும் மட்டும் இருந்துள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய் உடன் பூங்கா சென்றுள்ளார். அப்போது பூங்கா உள்ளே விளையாடிக் கொண்டிருந்த காவலாளி மகள் சுதக் ஷாவை இரண்டு நாய்களும் கடித்தன. இதைப் பார்த்த நாயின் உரிமையாளர் ஏதும் செய்யாமல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழந்தையின் அழுக்குரல் கேட்டு வந்த தாய் சோனியா வெறி பிடித்த இரண்டு நாய்களிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்றி உள்ளார்.
அப்போது அவரது தாய் சோனியாவையும் இரண்டு நாய்களும் கடித்துள்ளன. இதைப் பார்த்த நாயின் உரிமையாளர் நாயை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். இரண்டு வெறி நாய்களும் கடித்ததில் தலையில் பயங்கர காயத்துடன் இரத்த வெள்ளத்தில் அந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்குப் போலீஸார் புகழேந்தியை விசாரணைக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நாயின் உரிமையாளர் குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக கூறி உள்ளார். உடனே இராஜீவ காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு அப்போலோ குழந்தைகள் மருத்துமனைக்கு குழந்தை மாற்றப்பட்டு அங்கு குழந்தைக்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் பொழுது: நேற்று மாலை அவர் பூங்காவிற்கு நாயை அழைத்து வரும் பொழுது இரண்டு நாயை கயிறு கட்டி அழைத்து வராமல் இருந்துள்ளார். மேலும் நாயின் வாய் பகுதிக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் அணியாமலும் இருந்துள்ளது. பூங்கா உள்ளே வந்ததும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை இரண்டு நாய்களும் வெறி பிடித்தது போல கடித்துள்ளது. ஒரு குழந்தையின் தலையை கவ்வியும் மற்றோரு நாய் குழந்தையின் கையையும் பிடித்து கடித்துள்ளது. அப்போது கூட நாயின் உரிமையாளர் அதை தடுக்காமல் இருந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அவர் இந்த பகுதியில் இரத்த வங்கி நடத்தி வருகிறார். அவர் இரண்டு ரோவெல்லர் நாய்களையும் வளர்த்து அதன் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார். ஏற்கனவே அந்த இரண்டு நாய்களும் அந்தப் பகுதியில் உள்ளவர்களை இரண்டு முறை கடித்துள்ளது. ஆனாலும் அவர் நாய்களின் வாய்களுக்கு பாதுகாப்பிற்காக எந்த ஒரு கவசமும் அணிவிக்காமல் இருந்துள்ளார்.
அந்த குழந்தையை நாங்கள் மருத்துமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் அவரிடம் சென்று இனிமேல் இந்த நாய்களை இங்கே வளர்க்கக் கூடாது என தெரிவித்தோம் என கூறினார்.
அந்த பகுதியில் உள்ள பெண்கள் கூறும் பொழுது பிழைப்பிற்காக ஊரில் இருந்து சென்னை வந்து வேலை செய்யும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.