மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது. உடல் கூறாய்வில், அவரது வாயில் பாத்திரம் துலக்கும் இரும்பு நார் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மா்ம மரணமடைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் உடல்கூறாய்வில் புதிய திருப்பமாக இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா்.
அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங் உடல்கூறாய்வு என்ன கூறப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பதாகவும், ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயக்குமாரின் உடல்கூறாய்வு அறிக்கை, சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவுக்கும் அனுப்பி, ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், கிட்டத்தட்ட 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி 15 பேரிடம் நேரில் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
மரணத்துக்கு முன்பு, ஜெயக்குமார் எழுதிய இரண்டு கடிதங்களிலும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதும், உடல் கூறாய்வுகளும் அவரது மரணத்தைப் பற்றிய சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இறந்தவரை எரித்தால்தான், குரல்வளை முற்றிலும் எரிந்துபோகும் என்றும், எனவே இது கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெயக்குமாரில் கை மற்றும் கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாகவும் உடல்கூறாய்வில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இது கொலையாக இருக்கலாம் என்றே காவல்துறை உறுதி செய்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயக்குமார் மரணமடையும் முன்பே தனது மொத்த குடும்பத்தினருக்கு எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருந்த தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. அதாவது, ஜெயந்திக்கு(மனைவி) இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. நானும் சொல்லவில்லை. அவளிடம் மன உளச்சல் காரணமாக பேசினது, நடந்துகொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஜெயந்திக்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினா் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபா்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் பேரிலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.