நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் முக்கிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது.
முதற்கட்டமாக, ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ ஆய்வுக்காக மதுரை மண்டல தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அவரது டிஎன்ஏ அறிக்கை கிடைத்துவிடும் என்பதால், உடனடியாக அவரது மகனின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து இறந்தது ஜெயக்குமார்தானா என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், முக்கிய தடயங்கள் கிடைக்காமல் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஜெயக்குமாரை எரிக்க பயன்படுத்தப்பட்ட எரிபொருள் என்ன என்பது குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான், ஜெயக்குமார் இறந்த இடத்தில் தகர டப்பாவை காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதனை வைத்து, எந்தவிதமான எரிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
உடலை எரிப்பதற்கு என்ன விதமான எரிபொருள் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்து அதில் கிடைக்கும் முடிவினை அடுத்தே, அந்தக் கோணத்தில் விசாரணையைக் கொண்டுச்செல்லலாம் என்பது காவல்துறை திட்டமாகும்.
முன்னதாக, மா்ம மரணமடைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் தனது மருமகன் ஜெபாவுக்கு மரணமடைவதற்கு முன்பு எழுதியதாக காவல்துறையினா் மூலமாக அடுத்தடுத்து இரண்டு கடிதங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடல் கூறாய்வுகள் வெளியான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே காவல்தறையினர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.