தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மேலும், தேர்ச்சி விகிதம், பாட வாரியாக நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் கூடுதலாகும்.
இந்த நிலையில், பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி சதவிகித விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ் மொழிப்பாடத்தில் 96.85 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் ஆங்கில மொழிப்பாடத்தில் 99.15 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 99.15 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், அறிவியல் பாடத்தில் 96.12 சதவிகிதமும், சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் சதமடித்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் 4,428 மாணவர்களும் ஆங்கிலத்தில் 415 பேரும், தமிழில் 5 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.