தாம்பரம்: ஒரே இரவில் 3 கொலைகள்!

தாம்பரம்: ஒரே இரவில் 3 கொலைகள்!

முன்பகை காரணமாக இரு கொலைகளும், வழிப்பறிச் சம்பவத்தில் ஒரு கொலையும் நடந்துள்ளது.
Published on

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை ஒரே இரவில் 3 கொலைகள் நடைபெற்றுள்ளன.

குன்றத்தூர் பகுதியில் வழிப்பறிச் சம்பவத்தின்போது ஒரு கொலையும், தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் முன்பகை காரணமாக இரண்டு கொலைகளும் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குன்றத்தூர் அருகே மலையம்பாக்கம் கிராமப் பகுதியில் செங்கல் சூளையில் வேலை செய்பவர் ராஜேஷ்(வயது 30). இவர் திங்கள்கிழமை இரவு செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மூவர் கத்தி முனையில் ராஜேஷிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். அப்போது, ராஜேஷை கத்தியால் குத்திய நபர்கள், அவரின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷை இரவு 9 மணியளவில் கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்: ஒரே இரவில் 3 கொலைகள்!
ரூ. 4 கோடி விவகாரம்: நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் ஆஜராக சம்மன்

இரண்டாவதாக, தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா(வயது 26) ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இருப்பினும், எந்தவொரு குறிப்பிட்ட குழுவிலும் இவர் இல்லை.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோர் ஓட்டுநர் ஆனந்த் என்பவருக்கும், கார்த்திக் ராஜாவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை காரணமாக ஆனந்த் மற்றும் 5 பேர் கொண்ட குழு, கார்த்திக் ராஜாவை திங்கள்கிழமை இரவு சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். தொடர்ந்து, தாம்பரம் காவல் நிலையத்தில் அனைவரும் சரணடைந்துள்ளனர்.

அதேபோல், குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலைப் பகுதியை சேர்ந்த தாமஸ்(வயது 50) என்ற லாரி ஓட்டுநரை சபரி மற்றும் அவரது நண்பர்கள் திங்கள்கிழமை இரவு கொலை செய்துள்ளனர்.

சபரிக்கு கொடுத்த கடனை தாமஸ் திருப்பிக் கேட்டதால், இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாகவும், தொடர்ந்து, குற்றவாளிகள் சரணடைந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரின் புறநகர்ப் பகுதியான தாம்பரம் எல்லைக்குள்பட்ட பகுதியில் ஒரே இரவில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com