
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மூதாட்டியைக் கொலை செய்து இரவு நேரத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் பெண் சடலத்தை ரத்தம் சொட்ட சொட்ட வீச முயற்சித்த வழக்கில், தந்தை, மகள் கைது செய்யப்பட்டனர்.
நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததாக கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையிடம் தந்தை, மகள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில் நேற்று இரவு மீஞ்சூர் ரயில் நிலையம் வந்த போது அதிலிருந்து இறங்கிய தந்தை, மகள் ஆகிய இருவரும் சூட்கேஸ் ஒன்றை ரயில் நிலைய நடைமேடையில் இறக்கி வைத்து விட்டு வேகமாக செல்ல முற்பட்டனர்.
பின்னர் கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வில் ஈடுபட்ட போது உடனடியாக கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை ஆய்வாளர் சசிகலா மற்றும் அவரது குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து சந்தேகத்துக்கு இடமான நபர்களை மடக்கிப் பிடித்தனர்.
பிறகு கறுப்பு நிறம் கொண்ட சூட்கேஸ் அருகே வந்து பார்த்த போது அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்ததைப் பார்த்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முதலில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் காவலர்களிடம் பிடிபட்டவர்கள், ஆந்திர மாநிலம் நெல்லூர் சந்தைபேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (43), அவரது 17 வயது மகள் என்பதும், அதேப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால், அவரை தலையில் அடித்துக் கொலை செய்ததால் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த ரயில் ஏறி மீஞ்சூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினருடன் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சூட்கேஸை திறந்து பார்த்தபோது, கை, கால்களை மடக்கி, தலையை மடித்து 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்ததைப் பார்த்து உடனடியாக உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் பொற்கொல்லரான பாலசுப்ரமணியம் நெல்லூரைச் சேர்ந்த மூதாட்டி மன்னம் ரமணி (65) என்பவரை நகைக்காக ஆசைப்பட்டு அவரை வீட்டிற்கு வரவழைத்து பெட்ஷீட்டை தலையில் போட்டு மூடி, கழுத்தை இறுக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த தாலி சரடு, செயின், கம்மல் என 50 கிராம் தங்க நகைகளை திருடிக்கொண்டு சடலத்தை சூட்கேசில் அடைத்து கொண்டு வந்ததாக தந்தை, மகள் ஆகிய இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை வழக்கு பதிந்து, தந்தை, மகள் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.