
மக்கள் மகிழ்ச்சியைப் பார்த்து சிலர் வயிறு எரிவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கள ஆய்வுகள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
“மாதம் மும்மாரி பொழிந்ததா?” என்று அரண்மனை உப்பரிகையில் நின்று வேடிக்கை பார்த்தபடி மந்திரிமார்களிடம் நிலவரம் கேட்கும் ஆட்சியல்ல இது. அன்றாடம் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவை முறையாகச் செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, பணிகளை நிறைவேற்றிடும் ஜனநாயக மாண்புமிக்கது நம் திராவிட மாடல் ஆட்சி.
கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் நடைபெற்ற அரசுப் பணிகள் கள ஆய்வு, கட்சிப் பணிகள் கலந்தாய்வு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மக்களின் வரவேற்பு, உடன்பிறப்புகளுடனான சந்திப்பு எனச் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியும் எழுச்சியும் நிறைந்திருந்ததுபோலவே, நவம்பர் 9, 10 ஆகிய நாள்களில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணமும் முழுமையான வெற்றியாக அமைந்ததை உங்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தென்மாவட்ட மண்ணுக்கேயுரிய பாச உணர்வுடன் மக்களின் பேரன்பை விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேரில் கண்டேன். தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாகவும், மக்களிடம் வாங்கும் சக்தி பெருகியிருப்பதாகவும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் தெரிவித்தார். அங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் தேவை குறித்து கேட்டேன். எதிர்பாராத வகையில் விபத்தில் இறந்துபோகும் தொழிலாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி கற்பதற்கான செலவுகளை அரசே ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர். அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் வகையில், மாவட்ட நிர்வாக அளவிலேயே ஒரு நிதியம் உருவாக்கவும், அந்த நிதியத்திற்கு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிட்டேன்.
விருதுநகரில் சத்யா காப்பகத்துக்கு சென்றபோது, காப்பாளர் என்னை அவர்களிடம் காட்டி, “இவர் யார் தெரிகிறதா?” என்று கேட்டபோது, “அப்பா…” என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன். கண்ணீர் துளிர்த்தது. அங்கிருந்த குழந்தைகளில் ஒருவர் நன்றாகப் பேசுவார் என்று சொன்னதையடுத்து, அவர் பேசத் தொடங்கினார். நான் வாங்கிச் சென்ற இனிப்புகளையும் பழங்களையும்விட நன்றி கலந்த அன்புடன் வெளிப்பட்ட அந்தக் குழந்தையின் பேச்சு அத்தனை சுவையாக இருந்தது. அங்கிருந்த குழந்தைகள் அனைவருமே என்னைத் தங்களின் தந்தையாகவே பார்த்து அன்பை வெளிப்படுத்தினர். வாழ்வின் பெரும்பயனை அனுபவித்த உணர்வைப் பெற்றேன்.
95 ஆண்டுகால வாழ்வில் 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அர்ப்பணித்த மகத்தான தலைவர் கருணாநிதி. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியான அவரது புகழ் போற்றும் வகையில் அவரது நூற்றாண்டின் நினைவாக சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் மாபெரும் நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம் போன்றவற்றை அமைத்தோம். கருணாநிதியைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை.
தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அரசியல் சட்டம் வகுத்து தந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு. அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்கள் பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.
விருதுநகரில் நான் சென்று பார்வையிட்ட அரசு காப்பகத்திற்கு அன்னை சத்யா காப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் 40 ஆண்டுகால நண்பரான எம்.ஜி.ஆரின் தாயார்தான் அன்னை சத்யா. அவர் பெயரில்தான் அரசு காப்பகம் இன்னமும் இயங்கி வருகிறது. இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டப்பேரவையிலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது.
கோவை, விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளவிருக்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.