
இலங்கை அரசையும், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப் 20 ஆம் தேதி ராமேசுவரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டு மீனவர்களை கடல் எல்லையில் கைது செய்து துன்புறுத்துவதை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகளை சுற்றி வளைத்து அச்சுறுத்துவது, நாட்டுப் படகுகளையும் கூட கைப்பற்றி வழக்குப் போடுவது, மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவது, நடுக்கடலில் மோதலுக்கு முயல்வது என பல வகையான முயற்சிகளை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது செய்து வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நூற்றைம்பது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து கப்பல் மோதலில் ஒரு மீனவர் பலியாகியுள்ளார்.
இதுபோன்ற சமயங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உரிய எச்சரிக்கை, கண்டனக் குரல்கள் எழ வேண்டுமென பலமுறை வற்புறுத்தியுள்ளோம். ஆனால், மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை, மீனவர்களின் பிரச்னையை புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. ராஜதந்திர அடிப்படையிலான தலையீடுகள் இல்லாததால் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதும், பொருள் சேதத்திற்கு ஆளாவதும் தொடர்கதையாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் கைது செய்த தமிழ்நாட்டு மீனவர்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோரின் மீது வழக்குப் போட்டுள்ள இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்ததுடன், அதனை செலுத்தவில்லை என்று கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் இந்த இழிவான அராஜகப் போக்கினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கண்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசையும், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப் 20 ஆம் தேதி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் மீனவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.